ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)
பிற்பால் (Appendix)
ஹோமா பறவை (06)
பிற்பால் பிற்பால் ஆறு ஹோமா பறவை (பக்கம் 184, 247-ல் கூறப்பட்ட ‘ஹோமா’ என்ற பறவையைப் பற்றிய குறிப்பு)
வேதத்தில் ஹோமா என்றொரு பறவையைப் பற்றிக் கூறப்படுகின்றது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறிப்பிடுவது வழக்கம். அப்பறவை பூமிக்கு மேல் வெகு உயரத்திலேயே வாழும். அங்கேயே முட்டைகளிடும். அம்முட்டைகள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் பொழுதே பொரிந்து, குஞ்சுகளாகி, இறகுகள் முளைத்து, வலிவடைந்து, உடனே மேல்நோக்கி பறந்து சென்றுவிடுவதால் அவை என்றுமே பூமியைத் தீண்டுவதில்லை. உத்தம பக்தர்களை இப்பறவைக்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. அவர்கள் ஒரு சில பிறவிகள் எடுத்தாலும் அப்பிறவிகள் ஒவ்வொன்றிலும் உலக மயக்கத்தால் தீண்டப்பெறாமலேயே இறைவனை நோக்கித் திரும்பி விடுவார்கள். பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பின் (b) பிரிவிலிருக்கும் நம் மனிதனைப் போன்ற மனநிலையுடைய இவ்வகையினரின் மூலம் இறைவன், உலகின் உண்மையான பக்தி நெறிக்கு, உதாரண புருஷர்களின் வாழ்க்கையைக் காட்டவேண்டி, ஒரு சில பிறவிகளை இத்தீவிர முமுக்ஷுக்களுக்கு அளிப்பதும் உண்டு. இதை விளக்கும் ஓர் உதாரணக் கதையாவது:
ஒருவர் தன் நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த நண்பருக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தான். அக்குழந்தை அழகாக நடந்து, மழலை பேசும் பருவத்தில் இருந்தான். அக்குழந்தையின் சிறப்பு அம்சங்கள் எல்லாவற்றையும் பற்றி பெற்றோர், வந்திருந்த நண்பரிடம் வர்ணித்தனர். வீட்டின் முன் கூடத்தில் அமர்ந்திருந்தார் வந்தவர். ஆனால், அவர் அக்குழந்தையைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், அச்சிறுவன் வீட்டிற்கு வந்த ஒரு புதியவரின் மத்தியில் வர கூச்சத்துடன், வீட்டின் உட்பகுதியில் தன் தாயிடமே நின்று விளையாடிக் கொண்டிருந்தான். வந்தவர் அக்குழந்தையின் அழகை நேரிற் காண முடியாமல் இருப்பதை முன்னிட்டு, தாய், கூடத்தில் இருந்த பொம்மை, பந்து போன்ற விளையாட்டுப் பொருள்களை எடுத்துவரச் சொல்லி அக்குழந்தையைக் கூடத்திற்கு அனுப்புகிறாள்! அவனோ கூடத்தில் ஓடி அப்பொருள்களை எடுத்தாலும், அங்கே தாமதித்து நிற்காமல் உடனே தாயிடம் ஓடி உள்ளே வந்து விடுகிறான். வந்த விருந்தினர் அக்குழந்தையை மீண்டும் நன்கு காண முடிவதற்காக, தாய் மீண்டும் மீண்டும் ஏதாவது காரணம் கூறி அவனைக் கூடத்திற்கு சில முறை அனுப்பி வைக்கிறாள். ஆனால், அக்குழந்தை தன்னைக் கவனிக்கும் விருந்தினர் மேலோ, தனக்குக் காட்டப்படும் பொம்மை போன்ற பொருட்களின் மேலோ நாட்டமின்றி, தாய் இடும் கட்டளைகளின் நோக்கத்தைக்கூட அறியாதவனாய், ‘ஏன்?’ என்று தாயைக் கேட்டு அறியவும் விரும்பாதவனாய் (தாயிடம் உள்ள அன்பால்) பல முறை கூடத்திற்கு வந்து போய்க் கொண்டிருக்கின்றான். வந்த நண்பரும் குழந்தையை நன்கு கண்டு மகிழ்கிறார்!
இவ்வாறே, இறையன்பைத் தவிர ஏதுமில்லாத நிலையிலும் உத்தம பக்தர்கள் சிலர் உலகிற் சிற்சில பிறவிகள் எடுப்பதும் ஆகும்! இவ்வுவமைக் கதையில் குழந்தையே அவ்வுத்தம பக்தர்கள். வந்திருந்த நண்பரே உலக மக்கள். தாயே சர்வேசுவரன். பொம்மை போன்ற பொருள்களை எடுத்து வருவதே (சாக்குப் போக்குகளே) உலகை உத்தரிக்கும் பொருட்டு ஆன்றோர்கள் வந்து பிறந்து புரியும் பணிகள்! அப்பணிகளிலோ, உலக மக்களின் புகழ் பூஜையாதிகளிலோ, சிறிதும் கருத்தின்றி (நான் செய்கிறேன் என்ற கர்த்ருத்துவ புத்தியின்றி) இறைவனையே நாடி ஓடும் அந்த பக்தர்களின் போக்கில், அவர்களும் அறியாதபடி உலகில் நடைபெறுவதே உண்மையான உலகோத்தாரணம். அன்றி, தன் தவத்தையும் உபதேசத்தையும் உலகோர் பின்பற்றி உய்வு பெறவேண்டும் என்றெண்ணும் பக்தர்களாலும், தன்னை நம்பி தன் வழிக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடனும் அற்புதங்களைக் காட்டும் மனிதர்களாலும் உலகோத்தாரணம் ஒருசிறிதும் உண்மையில் நடைபெறுவதேயில்லை என்பது நாம் சிந்தித்தறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.